நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என நாம் நம்புகின்றோம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்துவின் ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது அவர் இக்கருத்தினை தெரிவித்தார்.
இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தற்போது இலங்கையில் நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்க இருக்கிறது. அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் அவரது தேசிய மக்கள் சக்திக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் முழுமையாக பாவித்து இந்த நாட்டிலே தீர்க்கப்படாத பல விடயங்களை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதை அவர்கள் கையில் எடுக்க வேண்டும் என்ற விடயத்தையும் நான் அவர்களுக்கு வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேபோல் எமது ஆதரவாளர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியானது 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புத்தெழுச்சி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் நான் கூற விரும்பும் விடயம் என்னவென்றால், எமது செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் தமிழர் விடுதலை கூட்டணியானது தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலையில் இருந்து முழுமையாக புத்தெழுச்சி பெறும் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான வேலைத்திட்டங்களில் நான் முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றேன்.
எமது ஆதரவாளர்களுக்கு நான் கூறியிருக்கிறேன். மட்டக்களப்பிலே மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மட்டக்களப்பில் ஒரு புதிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றேன். அதன் அடிப்படையில் நாங்கள் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவிருக்கிறோம்.
இன்று மட்டக்களப்பில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல கடமைகள் இருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. நிச்சயமாக எமக்கான நிலப் பிரச்சினை இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், மேய்ச்சல் தரை பிரச்சினை இருக்கிறது. வளங்கள் சூறையாடப்படும் நிலைமை காணப்பட்டு வந்திருக்கிறது.
இதற்கெல்லாம் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். நானும் ஒரு நிழல் பாராளுமன்ற உறுப்பினராக இந்த மாவட்டத்திலே தொடர்ச்சியாக எனது நிலைப்பாட்டை, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.