எனது ஆட்சியில் ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவர் – சஜித்!
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருக்கும் விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம்
( 15 ) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடுமாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும் , அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும் , ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு ,பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் , வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணித் திருடர்கள் , சட்ட விரோத மண் கடத்தல் கார கும்பல் உட்பட பல கள்வர்கள் , மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்,இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்:- மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும் இவ்வாறான கொலையாளிகள் கள்வர்கள் மற்றும் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில் இதற்கான நீதி நிலைநாட்டப்படும் என்பதனையும் ஐக்கிய மக்கள் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
அதனையும் தாண்டி குறிப்பாக நல்லாட்சிய அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராக கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் முடிக்கப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுத்திட்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாத கால பகுதிக்குள் நிறைவுறுத்தப்படும் என தெரிவித்ததாக சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சரவணபவன் உட்பட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.