யாழ்ப்பாணம் – 22 செப்டம்பர் 2025
கச்சாயில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மோதி குடும்பப் பெண் பலி – இளைஞர் படுகாயம்
யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் வீதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 46 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் நேற்று (21) காலை சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றது. குடும்பப் பெண்ணும் அவருடைய உறவுமுறை இளைஞருமானவர் மோட்டார் சைக்கிளில் கச்சாய் வீதியூடாக கொடிகாமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, அதே திசையில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்குப் பிறகு குறித்த உழவு இயந்திரம் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இந்த விபத்தில் கெற்பேலி மேற்கு மிருசுவிலைச் சேர்ந்த நந்தகுமார் ஜெயலக்சுமி (46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேவேளை, கனகலிங்கம் செந்தூரன் (22) என்பவர் படுகாயமடைந்த நிலையில் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Editor: கதிர்