யாழ்ப்பாணம் செம்மணியில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம்
யாழ்ப்பாணம் – செப்டம்பர் 25, 2025
வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (25) காலை யாழ்ப்பாணம் செம்மணியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் எதிர்வரும் 29 செப்டம்பர் வரை தொடரவுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நீதி கேட்கும் நோக்கத்துடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், உள்நாட்டு பொறிமுறையை நிராகரித்து, சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்துவதே முக்கிய கோரிக்கையாகும்.மேலும், செம்மணி விவகாரத்தில் நீதி கோருதலும் போராட்டத்தின் முக்கியப் பகுதி ஆகும்.
போராட்டத்தின் ஆரம்பத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பல பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: “சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம்” “தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்களுக்கு சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும்” “மனிதப் புதைகுழிகள் குறித்து உடனடி சர்வதேச நடவடிக்கை அவசியம்”எனும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
—
Editor: கதிர்