2024 செப்டம்பர் 21 திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து கட்சியின் முக்கியஸ்தர்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் , பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் , தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்து முடிவினை அறிவித்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று மதியம் 12.00 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியது.
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டது. அதன் பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பு தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.