கொரியர் சேவைக்குரிய நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து வெளிநாட்டு பொருட்களை திருடிய 2 சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த 27 மற்றும் 47 வயதுடைய சந்தேக நபர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
விமான நிலையூடாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு பொதிகளை யாழ்ப்பாணத்தில் வழங்குவதற்காக குறித்த வாகனம் நேற்று இரவு யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளது.
வாகன சாரதி வாகனத்தினை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நிறுத்தி வைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார்.
இதன் போது வாகனத்தின் கதவினை உடைத்து பட்டா வாகனத்தில் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் குறித்த கொரியர் சேவை ஊழியர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் 5 சந்தி பொம்மை வழி பகுதியில் குறித்த வாகனம் பொருட்களுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இதன் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வாகனத்தில் இருந்து 20 லட்சம் ரூபாய் பெருமதியான வெளிநாட்டு பொதிகளே திருடப்பட்டு உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.