புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (28.03.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது 56,000 மில்லிலீட்டர் கசிப்பும் , 3 பரல்களுக்குள் 75,000 மில்லிலீட்டர் எரிந்த கோடாவும், கசிப்பு உற்பத்தியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடனும் உடையார்கட்டு தெற்கு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.