உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது பெண் போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
16 ஆம் நூற்றாண்டில் ஓவியர் லியோனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா (Mona Lisa) ஓவியம் பிரான்ஸின் தலைநகர், பாரிஸ் உள்ள லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோனா லிசா ஓவியம் இதற்கு முன்பாகவும் பலமுறை சேதப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியில், “உணவு அக்கறை” என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து வந்த இரண்டு பெண்கள் ஓவியத்தின் மீது சூப் ஊற்றுவதை காண முடிகின்றது.
மேலும், தாக்குதல் பிறகு ஓவியத்தின் முன் நின்று கொண்டு ‘ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு’ உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய் வாய்ப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்தவுடன் அருங்காட்சியக பொறுப்பாளர்கள் ஓவியத்தை கருப்பு துணி கொண்டு மூடி உள்ளனர். எனினும், மோனா லிசா ஓவியம் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் பத்திரமாக வைக்கப்பட்டு இருப்பதால் இந்த சம்பவத்தின் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அவர்களால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா (Mona Lisa) ஓவியம் இதற்கு முன்பாகவும் பலமுறை சேதப்படுத்தப்பட்டும், ஒருமுறை திருடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.