அக்குரஸ்ஸ திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் குறித்த பகுதியில் வழங்கப்பட்ட தான நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளார்.
எனினும், சைக்கிள் டயரின் காற்று வெளியேறியதனால் அவர் அக்குரஸ்ஸ நகரை நோக்கி மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றுள்ளார்.
இதன் போது உஷ்ணம் மற்றும் சோர்வு காரணமாக சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நபர் 72 வயதான வர்த்தகரெனவும் மற்றும் நான்கு பிள்ளைகளின் தந்தையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல வருடங்களாக இதய நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த வர்த்தகரே இந்த நிலைக்குள்ளாகியுள்ளார்.
அவர் கீழே விழுந்து சில நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வந்த போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால் உடற்கூற்றுப் பரிசோதனை செய்வதற்காக சடலம் மாத்தறை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
மாத்தறை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இதயத்தின் உயிரணுக்கள் குறைந்தமையினால் மரணம் ஏற்பட்டடுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலைக்கு முகங்கொடுக்கும் நோயாளர்கள் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் இவ்வாறான திடீர் மரணங்களை குறைக்க முடியும் என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், உயிரிழந்த நபர் பல வருடங்களாக இதய நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.